Tuesday, August 15, 2006

அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!.

மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

போரில் கலந்து கொள்ளும் பெண்களையும் சிறுவர்களையும் கூட கொலை செய்யப்படுவதைத் தடுத்த நபி(ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்கள்? என்ற கேள்விகள் ஆங்காங்கே எழாமலில்லை.

(மறுமையில்) மனிதர்களிடயே தீர்ப்புக் கூறப்படுபவற்றில் முதன்மையானது(கொலை செய்த) இரத்தம் பற்றித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதார நூல்கள் : புகாரி-6533, முஸ்லிம்-3178, திர்மிதி-1316, நஸயீ-3926, இப்னுமாஜா-2605, அஹ்மத்-3492.

மறுமை நாளில் மனிதர்களிடையே நீதிபதியான அல்லாஹ் விசாரணையைத் துவங்கும் போது தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் "தொழுகை" பற்றியே முதலில் கேட்பான்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் "கொலை" பற்றியே முதலில் விசாரிப்பான்.

இவ்விசாரணை பற்றி அபூஹூரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "கொலை செய்யப்பட்டு இவ்வுலகில் இறந்தவன், தன் தலையைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, இறைவா! இன்ன மனிதன் என்னை அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அவனிடம் காரணம் கேள் என்று கூறுவான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரைக் கொலைச் செய்தால் அது இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்" என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று அநியாயமாக உயிர்களைக் கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் தாக்கீதாகும்.

இவ்வுலக நீதிமன்றத்தில் பொய் சாட்சியங்களை உண்மை சாட்சியங்களாக்கி ஒருவன் தன்னைக் குற்றமற்றவன் என்று உலக அரங்கிற்கு முன் கூறித் தப்பித்துவிடலாம். அல்லது உலக ஊடகங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைத்து தாங்கள் புரியும் அநியாயக் கொலைகள் உலகறியா வண்ணம் மறைத்து விடலாம். ஆனால் மறுமையிலோ இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாவங்களைச் செய்த உடல் உறுப்புக்களே முன் வந்து சாட்சி கூறி தவறை ஒப்புக்கொள்ளும்.

பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதவர் மீது இறைவன் இரக்கம் கொள்ளமாட்டான் என்ற நபி மொழிக்கேற்ப, மனித உயிர்களைப் பறிக்கும் அளவு கொலையுணர்வு கொண்டவர்களாக எவரும் இருக்கக்கூடாது என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையாகும்.

-அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Tuesday, August 1, 2006

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

ஐதராபாத், ஜன.8-
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை வழங்கப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

3 நாள் மாநாடு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் 4-வது மாநாடு, ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திட்டமும் இந்த மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. பலத்த கைதட்டல்களுக்கு இடையே, 2 பிரமுகர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கி, பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

ஓட்டுரிமை
"வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை 3 வகையாக பிரிக்கலாம்.அவர்களில் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள், தனி ரகம்.அவர்கள் ஒருபோதும் அந்தநாடுகளின் பிரஜையாக முடியாது.எனவே, அவர்கள், நமது நாட்டில் ஓட்டுரிமை வேண்டும் என்று கோருவது, நியாயமானது.இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.விரைவில் அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு இந்தியர்களுக்காக இன்சூரன்சு திட்டம் ஒன்றும் விரைவில் செயல்படுத்தப்படும். வெளிநாட்டு குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும்.தங்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக பணம் அனுப்ப வசதியாக யு.டி.ஐ. வங்கியுடன் இணைந்து புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனி பல்கலைக்கழகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மற்றொரு நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வசதிக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.வெளிநாட்டு இந்தியர்கள் இடையே கல்வி-கலாசார பரிமாற்றத்துக்காக தனி அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்.
வெளிநாட்டு இந்தியர்கள் மூலம் கடந்த 2001-ம் ஆண்டில் 1,300 கோடி டாலர் அளவுக்கு நமது நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு இது, 2 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து உள்ளது."

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்துகொண்டு பேசுகிறார்.


- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

நன்றி: தினத்தந்தி (8-01-2006)